சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ரிஷி காந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மொத ராத்திரி’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகும் ‘மொத ராத்திரி ‘ திரைப்படத்தில் ரிஷி காந்த்- அனீஸ்மா அனில் குமார் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
திருமணமான தம்பதிகள் எதிர்கொள்ளும் முதல் இரவு எனும் தாம்பத்ய சடங்கை முன்னிறுத்தி கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட் ‘ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது என்பதும் இந்த படத்தின் மூலம் அண்மையில் வெளியான ‘மேட் இன் கொரியா’ எனும் திரைப்படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ரிஷி காந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக ‘சிறை ‘படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனீஸ்மா அனில் குமார் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

