தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடும் இலங்கையின் வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
முதல் சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்ற இலங்கை, அங்கு ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
ஆனால், குழு 1க்கான சுப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த இலங்கை, இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
தென் ஆபிரிக்காவின் பொச்செஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணித் தலைவி விஷ்மி குணரட்ன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 25 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக உமாயா ரத்நாயக்க 13 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.
இந்திய பந்துவீச்சில் பார்ஷவி சொப்ரா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மன்னாத் காஷியப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 7.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் சௌமியா திவாரி ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் அணித் தலைவி ஷஃபாலி வர்மா 15 ஓட்டங்களையும் ஷ்வெட்டா செஹ்ராவத் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் தெவ்மி விஹங்கா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.