Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரசாயனக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்

July 5, 2016
in News
0
இரசாயனக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்

இரசாயனக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்

இறுதி யுத்தத்தின் போது இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘தி காடியன்’ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் போது இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம்.

கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணிக் குண்டுகளின் பாகங்களை மீட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் யுத்த சூனிய வலயத்தில் இருந்தே இவ்வாறு கொத்தணிக் குண்டுகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ‘தி காடியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தகைய கொத்தணிக் குண்டுகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடர் இடம்பெற்று வருகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுப் பகுதிகளில் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆனையிறவு பச்சிலைப்பள்ளி எனும் இடத்தில் கொத்தணிக் குண்டுகளின் 42 பாகங்களை மீட்டுள்ளதாக அரசசார்பற்ற நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், ‘தி காடியன்’ தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது படையினரால் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஆனால் அதனை அன்றைய அரசாங்கம் முற்றுமுழுதாக மறுத்திருந்தது.

இந்த நிலையிலேயே தற்போது கொத்தணி குண்டுகளின் பாகங்கள் யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

காணாமல்போன பிரகீத் எக்னெலிகொட இதுதொடர்பான செய்தியினை தனது இணையத்தளத்தில் வெளியிட்டதாகவும், இதனாலேயே அவர் காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

இவ்வாறான சூழலிலேயே தற்போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பெருமளவானோர் அங்கவீனர்களாகினர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம்பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பெரும் அழிவுகள் திட்டமிட்டவகையில் நடத்தப்பட்டிருந்தன.

ஐ.நா. வின் அறிக்கையின் படி இறுதியுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் பலியாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று வன்னியில் வசித்து வந்த பொது மக்களின் கணக்கெடுப்பையும், யுத்தத்தின் பின்னர் வெளியேறிய பொதுமக்களின் கணக்கெடுப்பையும் கருத்தில் கொண்டு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டியுமிருந்தார்.

ஆனால் யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினர் தெரிவித்து வந்தனர்.

யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் வன்னியில் உள்ள வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் அன்றைய அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் நேரடியாக கண்ட சாட்சிகளின் படி அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டமை நிரூபணமாகியிருக்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமையும், யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றமை குறித்த தகவல்கள் வெளியானதையடுத்தே இவ்விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்திருந்தது.

அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியிருந்தன.

அரசாங்கமானது யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றமையால் 2012ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை முதன்முதலில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு 2014 ஆம்ஆண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.இதனையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருந்தது.

இதற்கிணங்க இலங்கையில் யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து கலப்பு பொறிமுறையின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இதற்கிணங்கவே கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டு உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறியிருந்தது.

தற்போதைய நிலையில் யுத்தத்தின் போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளமையினால் அது குறித்தும் நிச்சயமாக விசாரணை நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

ஆனாலும் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்வதற்கு தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் பின் நிற்பதனால் இத்தகைய விசாரணைகள் உரிய பயனைத்தருமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

இவ்விடயம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.

இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்பு இல்லாமல் போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதனால் எங்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை. உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு நிபுணர்களையும், சேர்த்துத்தான் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு எதிராக தற்போது அரசாங்கம் கருத்து தெரிவித்து வருகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறியிருக்கின்றார்.

அதாவது குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் எண்ணத்துடன் தான் இவ்வாறான கூற்றுக்கள் கூறப்படுகின்றன. வெளிநாட்டு நீதிபதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறுவதன் அர்த்தமென்னவென்றால் இந்த விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடாது என்பதேயாகும்.

எனவே, சர்வதேச நீதிபதிகளற்ற உள்ளக விசாரணை எமக்கு நன்மைதரப்போவதில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உண்மையிலேயே இறுதியுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான யுத்தக்குற்றமாகும். சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவது என்பது விரோதமானதாகும்.

எனவே, அவ்வாறான குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும்.

தற்போது பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள கொத்தணிக் குண்டு தொடர்பான தகவல்கள் உண்மையானவையா? அதில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களின் நம்பகத்தன்மை என்ன என்பன குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி பல்வேறு வகையான தகவல்களை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பியிருந்தது.

இத்தகைய ஆதாரங்களே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதற்கான அழுத்தங்களாக அமைந்திருந்தன என்பதை மறுக்க முடியாது.

இதேபோல் தற்போது பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள கொத்தணிக்குண்டு விவகாரம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.

எதிர்காலத்தில் நடத்தப்படும் உள்ளகப் பொறிமுறை ஊடான விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும்.

எனவே தற்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை நிலையை உலகிற்கு அறிவிக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

Tags: Featured
Previous Post

இந்தியாவில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 79 பேர் பலி

Next Post

முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?

Next Post
முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?

முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures