தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், நடிகை நமீதா சென்ற வாகனமும் சிக்கியது. நமீதா, சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை, அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
நடந்த சம்பவம் குறித்து நமீதாவின் கணவர் வீநேரந்திரா(வீரா) கூறிருப்பதாவது : படப்பிடிப்பில் பங்கேற்க நாங்கள் 8 மணிநேரம் காரில் பயணித்தோம். நமீதா, காரின் பின் இருக்கையில் அசதியில் தூங்கி கொண்டிருந்தார். ஏற்கனவே இரண்டு மூன்று இடங்களில் சோதனை நடத்தினர். நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.
நள்ளிரவு 2.30 மணியளவில் சேலம் – ஆற்காடு சந்திப்பை அடைந்தபோது பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் எங்களை குற்றவாளிகள் போன்று அவமரியாதையாக நடத்தினர். என் மனைவி தூங்குகிறார் தேவைப்பட்டால் நானே எழுப்புகிறேன் என்று நான் கூறியபோதும் அவர்கள் பொருட்படுத்தாமல் காரின் கதவை சட்டென்று திறந்தனர். காரில் இருந்த நமீதா தடுமாறி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
நமீதாவின் பையை சோதனை செய்ய வேண்டும் என்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பையை, பெண் போலீஸ் தான் சோதிக்க வேண்டும் என நமீதா கூறினார். பெண் போலீஸ் சோதனையிட்டனர். இது தான் நடந்தது. அசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இதை வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்திவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

