கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் அண்மையில் 1000 தடுப்பூசிகள் சில வைத்தியர்களின் கோரிக்கைக்கமைவாக இராணுவத்தினரால் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் சுகாதார துறையினர், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏனையோருக்கு தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்தும் காலதாமதம் நிலவி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் எவரும் கருத்துக்கூறாமை ஏன் என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.