மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அடுத்த மதுரவாயல் கெங்கையம்மன் கோயில் தெரு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (23). ரவுடியான இவர் மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பல்சர் சதீஷ் என்பவருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட தகராறில் சதீஷை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் சங்கரை தீர்த்துக்கட்ட நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி நேற்றிரவு மதுரவாயல் லஷ்மி நகரில் தனது நண்பர்களுடன் சங்கர் பேசிகொண்டிருந்தார்.
இதுபற்றி அறிந்ததும் சதீஷ், தனது நண்பர்களான கார்த்தி (எ) கோலி, சன்னு, அஜீத் ஆகியோருடன் அங்கு விரைந்து உள்ளார். இவர்களை பார்த்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
ஆனால் அவர்கள் சங்கரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த சங்கர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தற்போது மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
