‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் எடிட்டட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படக்குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.
இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில் ,” ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.
நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.