இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக இங்கு வந்துள்ள ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நிருபர்கள் கேள்வி ஒன்றிற்கு நகைச்சுவையாக பதில் அளித்தார்.
அதாவது ஹர்பஜன் சிங் டெஸ்ட் தொடரின் போது இந்த ஆஸ்திரேலிய அணிதான் இந்தியாவுக்கு வந்ததிலேயே பலவீனமான அணி எனவே ஒயிட்வாஷ் உண்டு என்றார், ஆனால் ஆஸ்திரேலியா 1-2 என்று கவுரவமாகத் தோற்றது. இதே கேள்வியைத் தற்போது ஒருநாள் போட்டிகளுக்காக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பலவீனமான அணியா என்று நிருபர் கேட்டதற்கு பதில் அளித்த கிளார்க், “நான் முட்டாள்தான், ஆனால் நாளை உங்களுக்கு முதல் பக்கத் தலைப்புச் செய்தியைத் தருமளவுக்கு முட்டாள் அல்ல” என்றவுடன் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.
உடனே சீரியசான கிளார்க், “ஆஸ்திரேலிய அணி தங்கள் ஆற்றல்களை சீரான ஆட்டத்திறனாக மாற்ற இந்தத் தொடர் நல்ல வாய்ப்பு. இந்த அணியில் நல்ல திறமையான வீரர்கள் உள்ளனனர், இவர்கள் தங்கள் திறமையை நம்பி செயல்பட வேண்டும்.
சவுரவ் கங்குலி, விராட் கோலி தலைமைத்துவத்தில் ஒற்றுமைகள் தெரிகிறது. சவுரவ் கங்குலியால் ஏற்பட்ட சூழ்நிலைக்கு அவரைப் பாராட்ட வேண்டும். அவர் ஒரு போதும் பின் இருக்கைக்குச் செல்ல மாட்டார், தோனி, கோலி, அனில் கும்ப்ளே ஆகியோரும் தங்கள் பாணியில் இதனைச் செய்துள்ளனர். ஆக்ரோஷமான தலைவரால் வழிநடத்தப்படும் தற்போதைய இந்திய அணி தோல்வியடைய விரும்புவதில்லை
ஆஸ்திரேலியா 4-1 என்று வென்றால் மீண்டும் முதலிடம் பிடிக்கும். 2019 உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன, ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட அளவுக்கு வெற்றிகளைப் பெறவில்லை என்பது உண்மை.
மேலும் ஐபிஎல் மூலமாக இந்திய மண்ணை நன்றாக அறிந்த இந்த வீரர்கள் எளிதில் சூழலுக்கேற்ப மாற வேண்டும், மாறுவார்கள், இதில் சாக்குப் போக்குக்கே இடமில்லை” என்றார் மைக்கேல் கிளார்க்.
யார் சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலியா, ஸ்டீவ் ஸ்மித்தா என்று கேட்ட போது, “விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்மித் அவரை விட ஒருபடி மேலே இருக்கிறார். கேப்டன்சியில் இருவருமே சமமானவர்கள், முன்னேறி வருகிறார்கள். விராட் முன்னிலையில் உள்ளார், காரணம் அவர் அணி வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஒருவர் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பதல்ல விஷயம் அது அணியின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா என்று பார்கக் வேண்டும்” என்றார் மைக்கேல் கிளார்க்.