உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது. அவரது அறிவு அவ்வளவே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீங்கள் எங்களையும் உங்கள் தேசத்தில் உள்வாங்கி எமக்கும் உரிய உரிமைகளை வழங்கி வாழ விருப்பமில்லை என்று சொன்ன காரணத்தினாலே எங்களை தனியே போகவிடுங்கள் என்ற தீர்மானத்தினை வட்டுக்கோட்டையில் நாங்கள் நிறைவேற்றினோம்.
இன்று இந்த கருத்துக்களை சொல்வதற்கு காரணம் இருக்கின்றது. ஒப்பந்தங்களை தந்தை செல்வா செய்தார். அந்த ஒப்பந்தங்களில் முக்கியமாக இருந்தது எங்களுடைய நிலங்களை காக்கின்ற பணியாகும்.
பண்டாரநாயக்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைவதற்கான சந்தர்ப்பம் இருந்தது. இணைய வேண்டும் என்றே எழுதப்பட்டிருந்தது.
காணி அதிகாரம் பிராந்திய அதிகாரசபைக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தங்களில் சமஸ்டி என்ற சொல் எங்கும் இருக்கவில்லை. பண்டா செல்வா ஒப்பந்தத்தில் சமஸ்டி என்ற சொல் இருக்கவில்லை. டட்லி செல்வா ஒப்பந்தத்திலும் சமஸ்டி என்ற சொல் இருக்கவில்லை.
சமஸ்டி என்பதெல்லாம் இல்லை எனவே புதிய வரைபை ஏற்றுக்கொள்ளக்கூடாது என பலர் இன்று கூக்குரல் இடுகின்றார்கள். ஆனால் நாங்கள் தான் சமஸ்டிக்கட்சி. சமஸ்டியை எதிர்த்தவர்கள் நீங்கள். அதுவும் காலாகாலமாக.
தற்போது சமஸ்டி மீது திடீர் காதல் ஏற்பட்டுள்ளது. தேசிய கீதம் இசைப்பது என்பது சிறு விடயம். அதனை பெரிதுபடுத்தக்கூடிய விடயம் இல்லை. ஆனால் அது மனநிலையின் அறிகுறியாக இருக்கின்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் யாப்பு தெரியாது. அது என்ன சொல்கின்றது என்பது தெரியாது. ஆங்கில பத்திரிகையொன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டிருந்தபோது அரசியல் அமைப்பு சட்டத்திலே தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்தான் உள்ளது என கூறியுள்ளார். அவ்வளவுதான் அவருடைய அறிவு.
13ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. 16 ஆவது திருத்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதும் அவருக்கு தெரியாது. மொழி உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தினை அவர் வாசித்தது கிடையாது.
இந்த திருத்தத்திற்கு முன்னதாக 78ஆம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது அது சிங்களத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்டது என்பது அவருக்கு தெரியாது.
இரு மொழியிலும் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் எது மேலோங்கும் என்பதும் கிடையாது. இரண்டுக்கும் சம அந்தஸ்து இருக்கின்றது.
எங்களை பொறுத்தவரையில் தேசியக்கொடியாக இருக்கட்டும் தேசிய கீதமாக இருக்கட்டும் நாங்கள் இன்னும் இந்த நாட்டின் தேசிய வாழ்க்கைக்குள் உள்வாங்கப்படவில்லை.
மாகாணசபைகள் உருவாக்கப்பட்டபோது நாங்கள் மீண்டும் இந்த ஆட்சி முறைக்குள் வந்தோம். ஆனால் அதனை முழுமையான தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை திருத்தம் செய்யவேண்டும் என்றே கூறினோம். அதன் பின்னரே பாரிய யுத்தங்கள் எல்லாம் நடந்தது.
நாங்கள் இன்னும் தேசிய வாழ்க்கைக்குள் சம பிரஜைககளாக உள்வாங்கப்படவில்லை. அவ்வாறு உள்வாங்குவதற்கான இணக்கத்தினை தெரிவித்துள்ளோம். அதாவது ஒரு நாட்டில் வாழ்வதற்கான இணக்கத்தினை கூறியிருந்தாலும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் அழுத்தம் திருத்தமாக நாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்.
அது செய்யப்படவேண்டும். அது செய்யப்படும் வரை எதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். என்பதனையும் நாம் முழு நாட்டிற்கும் தெரிவித்திருக்கின்றோம்.
நாங்கள் தேசிய கீதத்தினை பாட விட வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களை விட்டால் போதுமென்றே கேட்கின்றோம். அதனையே அரசாங்கத்திற்கும் சொல்ல விரும்புகின்றோம்.
சர்வதேசத்தில் இலங்கையும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற நாடு என்று கருத வேண்டும் என விரும்பினால் 70 வருட காலமாக இத்தனை தசாப்தங்களாக தொடர்ச்சியாக எங்கள் மக்கள் கொடுக்கின்ற ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்தே ஆக வேண்டும்.
அது செய்யப்பட்டால் தான் இந்த நாட்டில் நல்லிணக்கம் உருவாகலாம். முன்னேற்றம் அடையும். அத்துடன் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட முடியும். அது செய்யப்படாத வரையில் நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

