கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு சுயாதீன குழு ஒன்றை நியமித்து அதன் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராயர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.
பலியான மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என பேராயர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்.
பேராயரின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் இடம் பெறாதவாறு தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நியமித்தல், புலனாய்வுத் துறையை பலப்படுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நஸ்ட ஈடுகளை உரிய முறையில் கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி இதன் போது பேராயரிடம் உறுதியளித்தார்.