பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான வழக்கு: ஆகஸ்ட் 1ல் விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி 19ம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அதில், சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று வாதிட்டது.
மேலும், குறிப்பிட்ட 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரபுல்லசீபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ரஞ்சித்குமார், இதே அம்சங்களை வலியுறுத்தியதுடன், வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு வாரம் வேண்டுமானால் ஒத்தி வைக்கலாம் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு முருகன், சாந்தன் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
கைதிகள் 7 பேரும் 22 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் வழக்கை நீடிக்காமல் உடனே பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.