பிரான்ஸ் தலைநகர், பரிஸில் அமைந்துள்ள 850 வருட பழைமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மிகவும் வருந்தமளிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பரிஸில் அமைந்துள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. சிறிது சிறிதாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்ததால் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தையடுத்து உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் பிரான்ஸில் வரலாற்று சின்னமாக விளங்கும் 850 வருட பழைமையான தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம்.
இந்த விபத்தையடுத்து குறித்த தேவாலயத்தை மீண்டும் கட்டி பழைய நிலைமைக்கு கொண்டுச்செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் பிரான்ஸ் மக்களுடன் இலங்கை உறுதுணையாக நிற்கும் என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

