இந்தியா, ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த காதலியை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸினுள் வைத்து வாய்க்காலில் வீசிய காதலனால் அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் லாவன்யா. இவருக்கு வயது 25. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் என்பவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்து வந்தது முதல் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் பணிக்குச் சென்ற பின்னரும் இந்தக் காதல் தொடர்ந்துள்ளது. இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
ஆனால், திருமணப் பேச்சை மட்டும் சுனில் தொடர்ந்து தவிர்த்து வந்தார். லாவன்யாவின் அழுத்தம் காரணமாக, திருமணத்துக்குச் சம்மதம் எனத் தெரிவித்த சுனில், தனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்துள்ளதாகவும் லாவன்யாவுக்கு அங்கு வேலைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி அவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார்.
லாவன்யாவின் பெற்றோரும், அவரைக் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி விமான நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்..
நேர்முகத் தேர்வு முடித்து விட்டு லாவன்யா ஏப்ரல் 7ஆம் திகதி திரும்பி வருவதாகவே திட்டம். ஆனால், 7ஆம் திகதி அவர் வீடு திரும்பவில்லை. இதனால் லாவன்யாவின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், லாவன்யா குடும்பத்தினரிடம் சுனில் குமார் மஸ்கட் அழைத்துச் செல்வதாகச் சொன்னது பொய்.
ஏப்ரல் 4ஆம் திகதி அவரின் பெற்றோர் சென்ற பிறகு, விமானம் ரத்தாகிவிட்டது எனவும், இன்று இங்கு இருக்கும் விடுதியில் தங்கிவிட்டு நாளை காலை செல்லும் விமானத்தில் மஸ்கட் சென்று விடலாம் எனவும் விமான நிலைய விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
விடுதியில் லாவன்யா மீண்டும் திருமணம் தொடர்பான பேச்சை எடுக்க ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற சுனில், ஏப்ரல் 5-ம் திகதி அவரைக் கொலை செய்துள்ளார்.

