கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்திரன் சாப விமோசனம் பெற்ற புனித தலம் சுசீந்திரம். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் அதிகம் திருவிழாக்கள் நடக்கும் கோயிலும் இதுதான். மார்கழி மாதம் 10 நாள்கள் நடக்கும் திருவிழாவின்போது பெரிய சுவாமி தேர் உள்ளிட்ட அனைத்து தேர்களும் ஓடும். இரண்டாவதாகச் சித்திரை மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. அதில், பெரிய தேர் தவிர மீதமுள்ள 3 தேர்கள் ஓடும். ஆவணி மாதம் மற்றும் மாசி மாத திருவிழாக்களின்போது ஒரு தேர் ஓடும். அதிலும் மாசி மாத திருவிழா 9 நாள்கள் மட்டுமே நடத்தப்படும்.
இந்த வருடம் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. மேலும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கம் சார்பில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

