தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு, அரசியல் வாதிகளிடம் உள்ளபோதிலும் அதனை அரசியல்வாதிகள் தீர்க்கின்றனரா என அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்றைய (சனிக்கிழமை) நாடாளுமன்ற குழுநிலை விவாத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இதன்போது அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் தமது கடமையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த இராணுவத்தினர், அரசியல் வாதிகளின் பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு கோரினர். தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு அரசியல் வாதிகளிடம் உள்ளது.
எனினும் அதனை அரசியல்வாதிகள் செய்கின்றனரா? என்பதே தற்போதைய கேள்வி. அவ்வாறான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதற்கு பதிலாக அந்த பிரச்சினையை மேலும் வலுவடைய செய்யும் வகையிலான வேளைத்திட்டங்களையே மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் ஜீவனோபாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய பிரச்சாரங்கள் மக்களை அழிவை நோக்கி இட்டுச்செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரச்சினை குறித்து அனைவரும் புரிந்துணர்வுடன் செயலாற்றாத பட்சத்தில் இன்னுமொரு தலைமுறைக்கு இந்த தேசிய பிரச்சனை கடத்தப்படுகின்ற அதேவேளை, இந்த தேசிய பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை” என தெரிவித்தார்