குருவாயூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ-வுமான பெண் எம்.எல்.ஏ கீதா கோபியின் மகள் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை நடத்தும் பொறுப்பு, ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக பணம் வாரி இறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு வந்திருந்த கேரள முதலமைச்சர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடந்த திருமணத்தைப் பார்த்து வியந்துபோனார்.
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் செனிதாலா ஆகியோரும்கூட திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமணத்தில் மணமகள் கழுத்து முதல் கால் வரை கிலோக்கணக்கில் தங்கம், வைர நகைகள் தொங்கிக்கொண்டிருந்தன. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
கம்யூனிஸ்ட், கட்சியினர் எளிமையானவர்கள், வீட்டு விஷேசங்களை எளிமையாக நடத்திவைப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், கீதா கோபி செயல்பட்டதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதனால் கேரள மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை எம்.எல்.ஏ கீதா கோபியிடம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.