ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டதுடன் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
சந்தேகத்துக்குரிய அந்த நபரிடம் ரஷ்ய கடவுச்சீட்டு இருந்தது எனவும் குறித்த நபர் ரஷ்ய குடியுரிமை பெற்றவர் எனவும் தெரிய வந்துள்ளது.
அந்த நபர் ரயில் நிலையத்தில் நுழைந்து பயணிகளுடன் பயணியாக கடந்து செல்வதும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
அவர் எடுத்து வந்த வெடி குண்டானது Shrapnel எனப்படும் அதிக சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய வகை எனவும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி அவர் மட்டுமே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அவர் கொண்டுவந்த வெடி குண்டு நிரப்பிய தோள் பையை ரயிலுக்குள் வீசி விட்டு தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி ரயில் நிலையத்தின் வெளியே சென்று ரிமோட்டால் வெடி குண்டை வெடிக்க செய்திருக்கும் வாய்ப்பும் உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பீட்டர்ஸ்பர்க் விஜயம் செய்திருந்த நேரம் பார்த்து பயங்கரவாதிகள் குறித்த சதிச்செயலை நடத்தி உள்ளனர்.
வெடி குண்டு தாக்குதலை அடுத்து சம்பவ இடத்தை பார்வையிட ஜனாதிபதி புட்டின் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த முடிவை ஏற்க மறுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் மீண்டும் வெடி குண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு என அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி புட்டின் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மலர் வைத்து அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.