ஜல்லிக்கட்டுக்காக பதவியை ராஜினாமா செய்த மாமனிதர்: கவர்னருக்கு பரபரப்பு கடிதம்
இளைஞர்கள் தற்போது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் முழுவீச்சில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போது பல நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்தாலும் முதலில் இதற்காக குரல் கொடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவருக்கு இதுபற்றிய பல தகவல்களை அளித்தவர் சிவசேனாபதி.
சமுக ஆர்வலரான கார்த்திகேய சிவசேனாபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மோடி தெரிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமாக வலுத்து வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்ட நாள் முதலே மெரீனாவில் போராட்டம் முன்னெடுத்து ஜல்லிக்கட்டு விடயத்தில் பீட்டா தலையீட்டு தடை வாங்கியதற்கான பின்னணி காரணங்களை ஆய்வு செய்து தெளிவாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் சிவசேனாபதி.
இவர் நாட்டு மாடுகளின் இனத்தை காப்பாற்ற ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தார். தற்போது, இவ்வளவு பெரிய போராட்டம் வெடிக்க சிவசேனாபதியின் விழிப்புணர்வும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்நிலையில், சிவசேனாபதி ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தான் வகித்து வந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாககுழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி அவசர சட்டம் இயற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதியை தமிழ்நாடு கவர்னர் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



