அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் தேவையான முறையில் வாக்குமூலங்களை வழங்குமாறு கோரி, விசாரணை நிறுவனங்களால் சாட்சியாளர்களுக்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அரசியல் பழிவாங்கல்களுக்காக நாட்டின் அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
றாகமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று அரசாங்கம் மற்றும் பொலிஸின் தேவைக்கேற்ப, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் செல்பவர்கள் அவர்கள் சொற்படி கேட்காவிட்டால், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
அவர்களைக் கொல்லாமல் கொல்கிறார்கள். பொலிஸாருக்குத் தேவையான வாக்குமூலத்தை எழுதி வாங்கும் வரை அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைத்து, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவின் பெயர்களைக் குறிப்பிடுமாறு கடுமையாக வற்புறுத்தியுள்ளனர்.
அவ்வாறு செய்யாவிட்டால், முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் வாக்குமூலம் அளிக்க வந்தவருக்கு நேர்ந்த கதியைப் போன்ற நிலை ஏற்படும் என்றும், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மரண பயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான சத்தியக்கடதாசி மூலமான வாக்குமூலத்தை கபில சந்திரசேன நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருந்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை, இந்த அழுத்தங்கள் காரணமாக இன்று அவரது உயிர் பறிபோயுள்ளது.
இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? யாராவது தவறு செய்திருந்தால் அதற்கு எதிராக நியாயமான முறையில் விசாரணைகளை நடத்துங்கள். எங்களை எப்போது அழைத்தாலும் நாங்கள் வந்து வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருக்கிறோம், நாங்கள் எங்கும் ஓடி ஒழியவில்லை.
எனவே இவ்வாறு தேவையில்லாமல் அழுத்தங்களைப் பிரயோகித்து அச்சுறுத்தி, இவர்களது பெயரைக் குறிப்பிடுமாறு வற்புறுத்துவதும், அவ்வாறு செய்யாவிட்டால் உங்களது மனைவியையும் பிள்ளைகளையும் சிறையில் அடைப்போம் என்று மிரட்டுவதும் ஏன்? எமக்குத் தேவையான வாக்குமூலத்தை நீங்கள் தராவிட்டால் உங்களுக்கு மரணம் தான் நேரிடும் என்று அச்சுறுத்துவதும், ஒருவரை உயிருடன் கொல்லாமல் கொல்வதும் எதற்காக? நாட்டின் அரச பொறிமுறை இந்தளவுக்கு கீழ்த்தரமான நிலைக்கு வீழ்ச்சியடையத் தேவையில்லை என்றார்.

