நுவரெலியாவில் (Nuwara eliya) அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டில் நேற்று (12) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்து வைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பில் தெரிவிக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு இரகசிய தகவல்
இதற்கமைய நுவரெலியா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், குறித்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா காவல் நிலையத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி
இதேவேளை, அரச இலச்சினையுடன் கூடிய அரச வாகனமொன்று கொழும்பு (Colombo) – ஹோமாகம (Homagama) ஆதார வைத்தியசாலை பிணவறைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு அரச வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெலியத்த – புவாக்தண்டாவ, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு அருகில், அரசாங்கத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டது.
இந்த வாகனத்தை தங்காலை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.













