மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை(செப்., 13) நாடு முழுவதும் நடக்கிறது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா பிரச்னையை காரணம் காட்டி நீட் தேர்வை நடத்த வேண்டாம் என நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சமூகவலைதளங்களில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என டிரண்ட் செய்கின்றனர். இதுஒருபுறம் இருக்க மதுரையில் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்.,13) நீட் தேர்வு நடக்க இருக்கிறது. நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது.
உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்ற காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

