கனடா தபால் துறை பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
கனடா தபால் துறை தொழிற்சங்க ஊழியர்களின் வேண்டுகோள்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று போரிக்கை விடுத்து அவ்வூழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் மொன்றியலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா தபால் துறை ஊழியர்கள், தமது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் தபால் துறைக்கு நீண்ட காலமாக பல வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பிலான கனடா தபால் துறையுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தபால்த்துறை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அவர்களது ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள் முதலில் மொன்றியலில் உள்ள ஒரு இடத்தில் ஒன்றுகூடி, பின்னர் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று அங்கு நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மொன்றியலைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், ஒட்டாவா, கியூபெக் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் அதிகமானவர்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.