கனடிய வெளிவிவகார அமைச்சரின் யாழ்ப்பாணப் பயணத்தில் தரைவழிப்பாதை தவிர்க்கப்பட்ட காரணம் என்ன?
கனடிய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த போது யாழ் மாவட்டத்திற்கான பயணத்தையும் மேற்கொண்டிருந்தார்.
யாழ் மாவட்டத்திற்கு அவர் கொழும்பிலிருந்து தரை வழியாகவோ அல்லது வவுனியா வரை உலங்கு வானுர்த்தியில் சென்று அங்கிருந்து தரைவழியாவோ சென்றிருந்தால் இராணுவ நிலைகள், மக்களின் வாழ்வியல் என்பவற்றைக் கண்டிருக்க முடியும்.
இருந்த போதும் அவர் அவ்வாறு செல்லாமல் இராணுவ உலங்கு வானூர்த்தி மூலம் தான் தங்கியிருந்த கொட்டேலிருந்து யாழ்ப்பாணம் சென்று அன்று மாலையே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார்.
இவரது பயண ஏற்பாடுகள் குறித்த விவகாரத்தை கவணித்த தூதரகம் அல்லது சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு சிலவேளைகளில் பாதுகாப்புக் காரணங்களையும் கருத்திலெடுத்து இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்கலாம் என்கிற ஹேஸ்யம் எழுகின்ற போதும்,
பல இராஜதந்திரிகள் தரைவழியாகவும் செல்கின்றார்கள், கடந்த சில ஆண்டுகளிற்கு முன்பு கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட கனடியப் பிரதிநிநிதியும் வெளிவிவகாரச் செயலருமான டீபக் ஒபராய் தரைவழியாச் சென்றிருந்தார் என்பதும்,
ஆனையிறவில் தான் சென்ற வாகணத்திலிருந்து தரையிறங்கி, போரின் போது மரணித்த மக்களிற்கான மலர்வளையம் ஒன்றை வைத்து வணங்கினார் என்ற செய்தியும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு அமைச்சரும் தரைவழியாக குறைந்தபட்சம் வவுனியாவிலிருந்து சென்றிருந்தால் கூட தமிழர்கள் படும் இன்னல்களை அறிந்திருக்க முடியும். யாதார்த்த நிலையையும் இராணுவப் பிரசன்னத்தையும் கண்டிருக்க முடியும் என்ற கருத்தை கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சருடைய பேராளர் குழுவில் கனடாவில் இருந்து பல கனடாவிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கையர்கள் சென்றிருந்தாலும் ஏனோ அவர்கள் குறித்த பெரிதாக வெளிவரவில்லை. இவ்வாறு செல்லும் பேராளர்கள் விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது பெருமபாலும் வழமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவில் தமிழ் சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் பலரும் தற்போது கனடிய அரசால் இலங்கையரசிற்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் உதவிகளைப் பற்றிய அதிருப்தியான செய்திகளை பதிவு செய்தாலும்,
கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் கருத்துப் பதிவை மேற்கொண்டுள்ள கனடியத் தமிழ்காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளையவர்கள், இலங்கை விவகாரத்தில் லிபரல் அரசு சரியான பாதையில் செல்கின்றது என்றும்,
கொடுக்கப்பட்ட 11 மில்லியன் டொலர்கள் ஐந்து வருடங்களிற்கு இலங்கையின் மொழிச்சமத்துவத்தை அதிகரிபதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளமை அங்கே இனங்களின் மீளினைவிற்கு வழிவகுக்கும் என்றும், சுமார் 9 மில்லியன் டொலர்கள் ஐந்து வருடங்களிற்கு சுயதொழில்வாய்ப்புக்களை வேலையில்லாதவர்கள் மத்தியில் ஏற்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளதோடு,
கனடாவின் தற்போதைய அரசு இலங்கை விவகாரத்தில் இன்னமும் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கனடியத் தமிழ்காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை விடுத்துள்ளார்.