பத்திரிக்கையாளர்களிடம் உஷாராக இருங்கள் என குஷ்பு, தங்களது சின்னத்திரை குழுவிற்கு வாட்ஸ்-அப் அனுப்பி உள்ளார். அதில் அவர் பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என பேசியது சர்ச்சையான நிலையில் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்பு ஆகியவை இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தன. சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளை 60 பேருடன் நடத்த அனுமதி கொடுத்தனர்.
இந்நிலையில் பல டிவி தொடர் படப்பிடிப்புகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என்ற தகவல்கள் வெளியாகின. மாஸ்க் அணிவதில்லை, சானிடைசர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனச் சொல்கிறார்கள். அவற்றை பத்திரிகையாளர்கள் வந்து படம் பிடித்துவிடக் கூடாது, அதனால் சர்ச்சை எழக் கூடாது என்பதற்காக சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆக உள்ள குஷ்பு சங்க உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய வாட்சப் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதில், “போட்டோ எடுக்கிறதுக்கு, வீடியோ எடுக்கிறதுக்கு பிரஸ்காரன் கிழிக்கிறதுக்கே உட்கார்ந்திட்டிருப்பான். பிரஸ்காரங்களுக்கு கோவிட் தவிர வேறு நியூஸே கிடையாது. நம்மளப் பத்தி போடறதுக்கு காத்திட்டிருப்பாங்க,” என அவன், இவன் என ஏக வசனத்தில் அந்த ஆடியோவில் பேசி இருக்கிறார்.
டிவி தொடர் படப்பிடிப்புகள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்படி சுகாதாரமாக நடைபெறுகிறது என்பதை குஷ்பு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பு. பத்திரிகையாளர்களைப் பற்றி இப்படி தரக்குறைவாகப் பேசியுள்ள குஷ்புவுக்கு பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

