வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 27 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோர் உட்பட பாதுகாப்புத் துறை உத்தியோகத்தர்கள் பலர் அடுத்த இரு வாரங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை என்பவற்றிலுள்ள பலரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நேரடியாக தொடர்புபடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கொலைச் சம்பவம் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.










