அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 26ஆயிரம் ஏக்கருக்கு மாத்திரமே வேளாண்மை செய்ய அனுமதி- அரசஅதிபர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோக வேளாண்மைச்செய்கைக்கு ஆக 26ஆயிரம் ஏக்கர் வயல்நிலத்தில் மாத்திரமே செய்கைசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம் அம்பாறை அரச அதிபர் பி வணிகசேகர தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அங்கு மாவட்ட நீர்ப்பாசன த்திணைக்கள பிரதம பொறியயலாளர் நிஹால்செனவிரட்ண மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.எ.ஹலீஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பிரதேசசெயலாளர்கள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு அரசஅதிபர் வணிகசேகர உரையாற்றுகையில்
நாட்டிலேற்பட்ட வரட்சிகாரணமாக அம்பாறை மாவட்டத்திற்க நீர்ப்பாசனம் வழங்கும் அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தில் ஆக 65ஆயிரத்து 720ஏக்கர் கனஅடி நீர் மாத்திரமே தேங்கியுள்ளது.
இது மாவட்டத்திலுள்ள அனைத்துவயல்நிலங்களுக்கும் நீரை வழங்க போதுமானதாக இல்லை.
எனவே ஆக 26ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு மாத்திரமே நீரை வழங்கமுடியும்.
கல்லோயா இடதுகரை வாய்க்காலிலுள்ள 10ஆயிரத்து 150ஏக்கர் வயல்நிலமும் வலதுகரை வாய்க்காலிலுள்ள 8ஆயிரத்து 200ஏக்கர் வயல்நிலமும் கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கிலுள்ள 2ஆயிரத்து 200ஏக்கர் வயல் நிலமுமே தண்ணீரைப்பெறும் வாய்ப்புள்ளது.
சம்பந்தப்பட்ட பிரதேச வயல்நிலங்களில் எதிர்வரும் ஏப்ரல் 31ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பு வேலைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.
மேலதிகமாக மழைபெய்தால் செய்கைபண்ணப்படும் நிலப்பரப்பு கூட்டப்படும் என்றும் கூறினார்.
பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது









