நாட்டில் தற்போது 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக கொவிட் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ‘கொவிட் இட்டுகம’ நிதியத்தின் நிதியை உபயோகிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மத்திய வங்கி ஆளுனரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் நிதியத்தின் நிதியை கையாளும் அதிகாரம் மத்திய வங்கி ஆளுனருக்கே காணப்படுகிறது என்ற அடிப்படையிலே, அவரிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் திங்கட்கிழமை (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு குறித்து நாம் ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தோம்.
இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு உதவுமாறு வெளிநாட்டவர்களிடமும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சும் இதனைக் கருத்திற் கொண்டு இணைப்பு அதிகாரியொருவரை நியமித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவற்றை முறையாகப் பேணுவதற்காக வெளிப்படையான பொறிமுறையொன்றை அமைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் தொற்றின் போது ஸ்தாபிக்கப்பட்ட ‘இட்டுகம’ நிதியத்தின் மூலம் சுமார் 2 பில்லியனுக்கும் அதிக நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இதனைக் கையாளும் அதிகாரம் மத்திய வங்கி ஆளுனருக்கே உரித்தாகவுள்ளது.
எனவே இந்த நிதியத்திலுள்ள நிதியை தற்போது தோற்றம் பெற்றுள்ள சுகாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக உபயோகிக்குமாறு மத்திய வங்கி ஆளுனரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பாக அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்து , அவற்றினுடைய பிரச்சினையைத் தீர்க்குமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம்.
அத்தியாவசிய மருந்துகள் மாத்திரமின்றி சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தும் கூறுகள் , மருத்து உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் தற்போது 200 க்கும் அதிக மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 20 க்கும் அதிகமாக மருத்துவ கூறுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.