பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் மம்னூன் உசேன், இம்ரான்கானுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, கண்கலங்கியபடி உறுதிமொழி ஏற்புவிழாவில் பதற்றத்துடன் காணப்பட்டார் இம்ரான் கான். பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக இருந்த நஸீர் உல் முல்க், ராணுவ தளபதி பஜ்வா, இம்ரானின் மனைவி மேனகா, நவோஜித் சிங் சித்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, பதவியேற்றபின் முதல் நடவடிக்கையாக அமைச்சரவையை அறிவித்துள்ளார். அதன்படி, 20 பேர் அடங்கிய அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாகவும், மீதம் 5 பேர் ஆலோசகர்களாவும் நியமிக்கப்படவுள்ளனர். மேலும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரியாக பர்வேஸ் கட்டாக், நிதி மந்திரியாக ஆசாத் உமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக மக்தூம் ஷா மகமுது ஹூசைன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளைப் பதவியேற்பார்கள் என இம்ரான் கான் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.