கனடாவில் குடிவரவு விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு துரித, முக்கியத்துவ சேவை (Faster Premium Services)– லிபரல் அரசு ஆலோசனை!
கனடாவிற்கு குடிவரவாளர்களாக வர உள்ளோரது விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு மேலதிக கட்டணத்தை அறவிடுவதன் மூலம் துரித, முக்கியத்துவ சேவைகளை (Faster Premium Services) வழங்கும் ஒரு திட்டத்தை மத்திய அரசு ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் கலந்துரையாடல்கள், இணையவழி பெறப்படும் ஆலோசனைகள் மூலமாக, மேலதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் குடிவரவு விண்ணப்பதாரிகள், முன்னுரிமைச் சேவைகள் பெறலாமா என்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய லிபரல் அரசு முனைகிறது
ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நிறைவடைந்த இந்த கருத்தறியும் திட்டத்தில் “மேலதிக கட்டணத்தைச் செலுத்த விரும்புவோருக்கு, துரிதப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவது பொருத்தமான ஒரு செயற்பாடாக அமையுமா ?” எனக் கேட்கப்பட்டிருந்தது.
பணம் படைத்தவர்கள், ஏனையோரை முந்திச்செல்லக்கூடியதாக அமையும் இரட்டை-வகை விண்ணப்பப் பரிசீலனை முறையை இது உருவாக்கும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இன்னொரு சாரார், இதன் மூலம் பெறப்படும் மேலதிக வருமானத்தைக் கொண்டு, ஒட்டுமொத்த குடிவரவு முறையை வினைத்திறனும், வேகமும் கூடியதாக மாற்றியமைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இது குறித்து குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம், அவர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் உள்ள காலதாமதங்களே இம்முறையிலுள்ள முக்கிய பிரச்சினை எனக் குறிப்பிடுகிறார்.