திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கூட்டுறவு வங்கிகளின் கருத்தரங்கில், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை, வருமான வரி செலுத்தும் அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன. திமுக ஆட்சியில் நலிவடைந்து இருந்த கூட்டுறவு சங்கங்கள், அதிமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு தேர்தலின்போது சில தொகுதிகள் மட்டும் அதிமுக வெற்றிபெற்றபோது, அதிமுக அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம்பேசின. ஆனால், தடைகளைத் தாண்டி அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. விரைவில் இரு அணிகளும் இணைந்து செயல்படும்.
மேலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது குறித்து, நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவு எடுப்பேன். டிடிவி.தினகரன் மட்டுமின்றி, யார் ஆட்சியைப் பற்றி குறைகூறினாலும், அந்தக் குறைகளை நீக்கி, சிறப்பாக ஆட்சியைக் கொடுப்போம்.
அதிமுக தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது. அதிமுகவிலிருந்து ஒரு தொண்டர்கூட திமுகாவுக்கு, பிற கட்சிகளுக்கோ செல்ல வில்லை. நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்பதற்கு இதுவே உதாரணம். ஜெயல லிதாவின் எண்ணங்களை நிறைவேற்ற, ஒருங்கிணைந்து செயல்படுவோம். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையைப் போலவே தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து, அதிமுக அரசை விமர்சித்து வருகிறார். அவரது குற்றச் சாட்டுகளையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த தேவையில்லை. கமல்ஹாசன் நல்ல நடிகர். அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், தற்போது அவர் வழிதவறிச் செல்கிறார். இதை விரைவில் அவர் உணருவார் என்றார்