காவிரிப் பிரச்னைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவண சுரேஷ் தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கடலூரில் நேற்று நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பயண நிறைவுப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான் பேசிய சொற்ப நேரத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீக்குளித்து உயிரிழந்த ஈரோடு தர்மராஜை நினைவுகூர்ந்து காவிரி, நியூட்ரினோ உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று மனம் உருகிக் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் வைகோ மருமகன் சரவண சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று அதிகாலை தீக்குளித்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்ளின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன் சரவண சுரேஷ் மதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவன். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பான். பட்டதாரியான அவன் மிக அமைதியானவன். அனைவரையும் அன்போடு நேசிக்கும் உயர்ந்த பண்பாளன். என் துணைவியாரின் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளிலேயே நான் மிக மிக நேசித்தது சரவண சுரேஷைத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சரவண சுரேஷின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவனது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறான். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக்கொண்டான். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனைத் தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்? என்று தனது வேதனையை அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.
மேலும் வைகோ, “இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தான் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேஷின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொது வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று நொறுங்கிப்போன இதயத்தோடு மீண்டும் கரம் கூப்பி வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.