திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து பேசினார். தனது ரசிகர்களிடம் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-யில் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளார் என்று அவர் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியதாக தகவல் வெளியாகியது.
ஆனால், தான் அப்படி கூறவில்லை என்று பின் சத்யநாராயண ராவ் மறுத்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில், காலா பட ஷுட்டிங் நாளை தொடங்குகிறது. அதற்காக மும்பை செல்கிறேன்.
இது என் வேலை, என்னுடைய தொழில், அதைப் பார்க்க போகின்றேன், இது உங்களுடைய வேலை, அதை நீங்கள் பாருங்கள்.
என்னை, என்னுடைய வேலையை பார்க்க விடுங்கள், அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.