சில நாடுகளுக்கு செல்வதற்காக தனிநபர் வீசா உடைய பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் செல்லும் பெண்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டி.பி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய, பயிற்றப்படாத மற்றும் வீட்டு பணிப்பெண் தொழில் வாய்ப்புக்காக தனிநபர் வீசா உடைய இலங்கை பெண்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் முகவர் நிலையத்தின் ஊடாக மாத்திரமே அவர்கள் தமது பதிவினை முன்னெடுக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் ஈ.டி.பி சேனாநாயக்க குறிப்பிட்டார்.