பழைய பஸ் ஸ்டாண்ட் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையிலும், போக்குவரத்து பயன்பாட்டுக்கு அளிப்பதில், தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது.
திருப்பூர் நகரப்பகுதியை, நொய்யல் ஆறும், ரயில்வே பாதையும், மூன்று துண்டுகளாக பிரிக்கின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்றுவர, போதிய பாலம் வசதி இல்லை. ஓரிரு பாலங்கள் மட்டுமே இருந்ததால், நகர மக்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, நொய்யல் ஆறு, ரயில்வே ரோடுகளின் குறுக்கே, பாலங்கள் அமைக்கப்பட்டன. பல இடங்களில், இடம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, பாலம் தொங்கலில் விடப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை தீர்க்க, உயர்மட்ட பாலமே சிறந்தது என்று முடிவு செய்து, காமராஜர் ரோட்டில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் துவங்கி, காமராஜர் ரோடு வழியாக, தென்னம்பாளையம் தண்ணீர் தொட்டி வளாகம் வரை செல்லும் வகையில், பாலம் வடிவமைக்கப்பட்டது.அ.தி.மு.க., அரசு அமைந்த பின், நீண்ட நாட் கள் கழித்து, புதிய திட்டத்துடன் பாலம் துவங்கப்பட்டது. அரிசிக்கடை வீதி சந்திப்பில் துவங்கி, பழைய கலெக்டர் அலுவலகம் வரை, 43 கோடி ரூபாயில், பாலம் கட்டப்பட்டுள்ளது.
தேவைப்படும், இடங்களை கையகப்படுத்தாம லேயே, பாலம் பணி நடந்தது. இதற்காக, மாநகராட்சி இடம், சுகாதாரத்துறை இடம் கையகப் படுத்தப்பட்டன. அறநிலையத்துறை இடமும், சில தனியார் இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. பாலம் பணி முழுமை பெற்ற பிறகும், பாலத்தின் வடக்கு பகுதியில், சர்வீஸ் ரோடு முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ்கள் வெளியேறும் வாயில் அருகே, பாலம் வந்ததால், பஸ்கள் வெளியேற மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
எண்ண முடியாத அளவுக்கு, ஆக்கிரமிப்பு கடைகளும், ‘பிளார்ட்பார்ம்’ கடைகளும் முளைத்து விட்டன. திருப்பூர் நகர மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருவதால், சர்வீஸ் ரோடு முழுமை பெறாவிட்டாலும், பாலத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை முடித்து, திறப்பு விழாவுக்காக, முதல்வருக்கு ‘நோட்’ வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இனியும் தாமதம் செய்யாமல், சர்வீஸ் ரோடு பணிகளை முடிக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ரோட்டின் கிழபுறம், மக்கள் நடக்க கூட சர்வீஸ் ரோடு இல்லை. எனவே, சர்வீஸ் ரோடு பணிகளை போர்க்கால அடிப்படையில் துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.’நிலம் கையகப்படுத்தப்படும்’
இது குறித்து டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி கூறியதாவது: பாலம் பணிக்கு நிலம் எடுப்பது தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, நிலத்துக்கு அதிக இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள், நிலத்தை ஒப்படைக்க விட்டாலும், அரசு நடவடிக்கை எடுக்கும். வருவாய்த்துறை கமிஷனரிடம் (நிலம்) ஒப்புதல் கிடைத்ததும், இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செலுத்திவிட்டு, பாலத்தின் வடக்கே, கிழபுறத்தில் தேவையான நிலம் எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே, நிலம் எடுக்க ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதிகபட்சமாக, ஒரு மாதத்திற்குள் சர்வீஸ் ரோடு பணிகளும் முடிக்கப்படும்.
