தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கடற்றொழில்,அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
கலந்துரையாடலில், அமைச்சர் இ.சந்திரசேகர் குறிப்பிடுகையில்,
தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர்.
இச்சிறைச்சாலைகளில் சிறிதளவு நெரிசலான நிலை காணப்பட்டாலும், அதனைத் தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய சிறைச்சாலைகளைப் போலல்லாது, இங்கு கைதிகளுக்குத் தொழிற்கல்வி, கல்வித் தொடர்ச்சி, நூலக வசதிகள் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இச்சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் தற்போது சிறைச்சாலைகளில் ஏற்படும் கலவரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதால், எமது மாகாணத்திலும் எத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் நிலவும் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் தயாரித்து வழங்கிய மேலதிக அறிக்கை நீதி அமைச்சரிடம் அனுப்பி வைத்துத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
இந்த அவசர கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512ஆவது கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.















