ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்துகொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்காக ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்படும்பட்சத்தில் முதற்கட்டமாக ஒரு உறுப்பினர் மாத்திரமே இணைந்துகொள்வார் எனவும் கூறப்படுகின்றது.
எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இணைத்துக்கொள்வதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அத்துடன், இந்த விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியுள்ள ஏனைய இருகட்சிகளும் நடுநிலை வகிப்பதாகவும், ஆகையினால் திகாம்பரம் தரப்பை சமரசப்படுத்தும் முயற்சியில்அமைச்சர் ராஜித சேனாரத்ன இறங்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தரப்பிலிருந்து இன்னும் எவ்வித தகவல்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான ரவி கருணாநாயக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டமானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இதேவேளை, தொண்டமான் கடந்த ஆட்சி காலத்திலும், அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போதும் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கி செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.