ரஜினி எந்த தேதியில் கட்சி தொடங்குவார் என்று தான் கூறவில்லை என்று தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய மாலைப் பத்திரிக்கை ஒன்றில் இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டு இருந்தது. வட இந்திய சேனல் ஒன்றும் ஆகஸ்டு 20ம் தேதி ரஜினி புதிய கட்சி தொடங்குகிறார் என்று வெளியிட்டு இருந்தார்கள்.
உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமும் குழப்பமும் ஒரு சேர தொற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும் இன்னொரு பக்கம் இவ்வளவு சீக்கிரமாக சாத்தியமா என்ற சந்தேகமும் ஒன்றாக காணப்பட்டார்கள். அவரவருக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நமது செய்தியாளர்களுக்கும், அலுவலகத்திற்கும் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. நாமும் உடனடியாக ரஜினி தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ‘கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்ற தகவல்கள் வந்தது. இந் நிலையில் தமிழருவி மணியனுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் ஏராளமான விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. உடனடியாக, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் பா. குமரய்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரஜினி எந்த தேதியில் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் எந்த நேர்காணலிலும் குறிப்பிட வில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.