பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாயின் உயிர் பிரிந்தது.
பாஜகவின் மூத்த தலைவரான ஏ.பி.வாஜ்பாய் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் உடல்நிலையில் வாஜ்பாய்க்கு சிறுநீர் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை, மார்பு சளி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலையில், நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டு மோசமான நிலைக்குச் சென்றது. உயிர்iகாக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி, நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
வாஜ்பாயின் குடும்பத்தாரிடமும் பேசிய பிரதமர் மோடி, அவரது உடல்நிலையைக் கேட்டறிந்தார்.
இன்று காலை முதல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாயின் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.












