குழு 2: தென் ஆபிரிக்கா
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் தடவையாக சம்பியனாகும் முயற்சியாக அனுபவம் வாய்ந்த வீரர்கள் தென் ஆபிரிக்க குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தடவையேனும் இறுதிப் போட்டியில் விளையாடாத தென் ஆபிரிக்கா, 2 தடவைகள் மாத்திரமே அரை இறுதிவரை முன்னேறியிருந்தது.
கடந்த வருடம் அரை இறுதியை நிகர ஓட்டவேக வித்தியாசத்தில் தவறவிட்ட தென் ஆபிரிக்க அணியில் இடம்பெற்ற பெருமபாலான வீரர்கள் இம்முறையும் இடம் பெறுகின்றனர். நான்கு வீரர்களே புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரான வெய்ன் பார்னல், ரைலி ருசோவ் ஆகிய இருவரும் சில வருடங்களின் பின்னர் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட வீரர்களில் நம்பிக்கைக் கொண்டுள்ள தென் ஆபிரிக்கா முதல் தடவையாக இருபது 20 கிண்ணத்தை வென்றெடுக்குமா அல்லது அதன் காத்திருப்பு தொடருமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.
தென் ஆபிரிக்காவின் அதிரடி துடுப்பாட்ட நட்சத்திரம் ரசி வென் டேர் டுசென் உபாதை காரணமாக அணியில் இடம்பெறாததுடன் சகலதுறை வீரர் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸும் அணியில் இல்லை. அவர்கள் இல்லாதபோதிலும் அணியின் பலம் குறைந்துவிடவில்லை;.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த மார்க்கொ ஜென்சென் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் ஜென்சன் பயண பதில் வீரராகவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்தார். பிரிட்டோரியஸுக்கு பதிலாக தெரிவாகியுள்ள ஜென்சன் ஒரு பூரணத்துவமான வீரர் என இலங்கையின் மஹேல ஜயவர்தனவினால் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுவாத்தியம் மற்றும் ஆடுகளங்களின் தன்மை ஆகியவற்றுக்கு பொருத்தமான வீரர்கள் இடம்பெறுவதால் தென் ஆபிரிக்காவுக்கு முதல் தடவையாக உலகக் கிண்ணம் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தென்படுகிறது.
வரலாறு
சொந்த மண்ணில் நடைபெற்ற அங்குரார்ப்பண இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தென் ஆபிரிக்க அணி குறித்து நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சுப்பர் 8 சுற்று கடைசிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த பெரிய தோல்வியினால் நிகரஓட்ட வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா வெளியேறியது.
2009இல் அரை இறுதிவரை முன்னேறியபோதிலும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த வருடம் பாகிஸ்தான் சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது.
அதன் பின்னர் இரண்டு அத்தியாயங்களில் ஏமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா, 2014இல் அரை இறுதி வாய்ப்பை மீண்டும் பெற்றபோதிலும் அதிலும் தோல்வியே கிட்டடியது. அதனைத் தொடர்ந்து அடுத்த 2 அத்தியாயங்களில் தென் ஆபிரிக்காவினால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் போனது.
உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் அதிர்ஷ்டமற்ற அணி என வருணிக்கப்படும் தென் ஆபிரிக்க அந்த கசப்பான வரலாற்றை இந்த வருடம் மாற்றி அமைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அண்மைய பெறுபேறுகள்
கடந்த வருட உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் இந்திய மண்ணில் முதல் இரண்டு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அபார வெற்றிகளை ஈட்டிய தென் ஆபிரிக்கா, அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. தீர்மானம் மிக்க கடைசிப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. அடுத்து அயர்லாந்தை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா மீண்டும் இந்தியாவிடம் 1 – 2 என தொல்வி கண்டது. கடைசிப் போட்டியில் சதம் குவித்ததன் பலனாக தென் ஆபிரிக்க அணியில் ருசோவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
சிறந்த வீரர்கள்
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் துடுப்பாட்ட வரிசையில் ஏய்டன் மார்க்ராம் 4ஆம் இடத்தில் இருப்பதுடன் குவின்டன் டி கொக் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். அவர்கள் இருவரும் அதிரடிக்கு பெயர்பெற்றவர்கள். பந்துவீச்சுக்கான தரவரிசையில் தப்ரெய்ஸ் ஷம்சி 4ஆம் இடத்தில் இருக்கிறார்.
குவின்டன் டி கொக் (2032 ஓட்டங்கள், 13 அரைச் சதங்கள்), டேவிட் மில்லர் (2028 ஓட்டங்கள், 2 சதங்கள், 5 அரைச் சதங்கள்), ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (1372 ஓட்டங்கள், 11 அரைச் சதங்கள்), ஏய்டன் மார்க்ராம் (780 ஓட்டங்கள், 8 அரைச் சதங்கள்), ஹெய்ன்றிச் க்ளாசென் (651 ஓட்டங்கள், 4 அரைச் சதங்கள்), அணித் தலைவர் டெம்பா பவுமா (565 ஓட்டங்கள், 1 அரைச் சதம்), ரைலி ருசோவ் (558 ஓட்டங்கள், 1 சதம், 3 அரைச் சதங்கள்), தப்ரெய்ஸ் ஷம்சி (64 விக்கெட்கள்), கெகிசோ ரபாடா (54 விக்கெட்கள்), வெய்ன் பார்னல் (52 விக்கெட்கள்), லுங்கி நிகிடி (51 விக்கெட்கள்) ஆகியோர் அணியில் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
அவர்களைவிட கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்கியா, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.