மட்டக்களப்பில் 400 ஏக்கரில் ஆசியாவின் மிகப்பெரும் பள்ளிவாசல் அமையவிருப்பதாக சுமனரத்தின தேரர் குறிப்பிட்டிருப்பது பொய்யாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதகுறித்து அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் கூறியதாவது, மதிப்புக்குரிய சுமனரத்தின தேரர் தவறாக தகவல் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு புணானை பிரதேசத்தில் அரசாங்கத்தின் அனுமதியுடன், உயர் கல்வியமைச்சின் அங்கீகாரத்துடன் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உண்மை. இதுவே யதார்த்தம். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
சகல சமூகங்களும் கல்வி கற்கும் நிலையமே இதுவாகும். இங்கு சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கட்டணம் செலுத்தி படிக்க முடியும். ஷரீஆ பாடநெறியும் உள்ளது. சுற்றுலாத்துறை, தொழிற்நுட்பம், விஞ்ஞானத்துறை என பல்வேறு பாடநெறிகள் போதிக்கப்படவுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள் மாத்திரம் இங்கு கற்கமுடியும். இது தனியார் பல்கலைக்கழகம் ஆகும். அங்கு 300 க்கும் மேற்பட்ட சிங்களவர்களும், 200 க்கும் மெற்பட்ட தமிழர்களும், 100 க்கும் குறைவான முஸ்லிம்களும் வேலை செய்கிறார்கள்.
காழ்ப்புணர்வு கொண்டவர்கள், இனங்களிடையே பதற்றத்தை உருவாக்க முயலுபவர்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள். அவ்வாறான ஒரு விஷமப் பிரச்சாரமே புணானைப் பகுதியில் பள்ளிவாசல் கட்டப்படுவதாக கூறப்படுவது ஆகும். இதைவிட அந்தப்பகுதியில் 400 ஏக்கரில் ஆசியாவின் மகிப்பெரும் பள்ளிவாசல் அமைக்கப்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்றார் ஹிஸ்புல்லாஹ்.