அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார்.
இதேவேளை, “சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் வாக்கு” என்றும் சீமான் பேசினார்.
சென்னை அடையாறில் நேற்று (14 ஆம் திகதி) மாலை, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;
“அனைவரும் வாக்கு போடணும்; கட்டாயம் போடணும், ஆனால் அதை, நோட்டாவுக்கு போடுற முயற்சியை கட்டாயம் கைவிடணும். எனென்றால், சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் தராமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் ஓட்டு. எங்களுக்கு வாக்கு போடாமல், நீங்கள் அதை நோட்டாவுக்கு போடுவதற்கு காரணம் என்ன..? அதை சொல்லுங்கள், நாங்களும் நோட்டாவுக்கே போட்டுவிடுகிறோம்.

