ப்ரோ கபடி லீக் ஐந்தாவது சீசன் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 138 போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்த முறை கூடுதலாக நான்கு அணிகள் இடம் பெற்றிருப்பதோடு, கபடியை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்கில் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.8 கோடி ரூபாயும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.2 கோடி ரூபாயும் வழங்கப்படும். அணிகளுக்கான பரிசுத்தொகை மட்டுமல்லாது, சிறந்த பாடகர், சிறந்த பிடியாளர் உள்ளிட்ட தனி நபருக்கான பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்.
ப்ரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி கூறுகையில் ‛‛ஐந்தாவது சீசன் தொடங்கும் முன்பே, ப்ரோ கபடி லீக் பல மைல்கல்களை எட்டியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத ஸ்பான்சர்ஷிப் டீல் கிடைத்துள்ளது. வீரர்களுக்கான ஏலத்தில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விட, தற்போது பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் அணிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகை மற்ற விளையாட்டு லீக் தொடர்களுக்கு இணையாக உள்ளது. அடுத்து 13 வாரங்கள் நடக்கவுள்ள கபடி போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன ’’ என்றார்.
முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து ‛தமிழ் தலைவாஸ்‛ என்ற அணி பங்கேற்கிறது. அத்துடன், தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் பிற அணிகளில் பங்கேற்பதால் ஐந்தாவது ப்ரோ கபடி சீசனுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.