அனில் கும்ப்ளே இடத்தில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ-யினால் விண்ணப்பிக்கக் கோரப்பட்ட அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் முன்னாள் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா இந்த ஒட்டுமொத்த நடைமுறைகளையும் சாடியுள்ளார்.
ஆங்கில கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் அவர் கூறியதாவது:
சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்குமாறு சச்சின் கோரிய போதே அனைத்தும் முடிந்து விட்டது. சச்சின் ஒரு மிகப்பெரிய ஆகிருதி அவருக்கு முன்னால் யாரும் நிற்க முடியாது. கங்குலிக்கும் லஷ்மணுக்கு இதில் லேசாக அதிருப்தி இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த முறை கூட ரவிசாஸ்திரி நேர்காணலுக்கு வராமல் ஹாங்காங்கிலிருந்து நேர்காணல் கொடுத்ததற்கு கங்குலிக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
நான் ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியது போல் சாஸ்திரியை சச்சின் ஆதரிக்கிறார். இது இப்படித்தான் என்றால் எதற்காக மற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோர வேண்டும்? இது ஏறக்குறைய கேலிக்கூத்தான விஷயம்.
சாஸ்திரியின் கீழ் இந்திய அணி சிறப்பாக ஆடுமா என்பதை இப்போது கூற முடியாது. விராட் கோலியின் ஆதரவு சாஸ்திரிக்கு இருக்கிறது. ஆனால் பயிற்சியாளர் தேர்வு நடைமுறை நியாயமற்றதாக உள்ளது. சாஸ்திரியிடம் விண்ணப்பிக்கக் கோரியது சச்சின், இதுவே சாஸ்திரிக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்படுவதற்கான உத்தரவாதமாக அமைந்து விட்டது. சச்சினுக்கு சாஸ்திரி மீது நேர்மறையான அபிப்ராயம் இருந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கிறீர்கள் ஆனால் ஸ்கைப்பில் தேர்வு நடக்கிறது. இது நேர்காணலே அல்ல. இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை.
எனக்கு அனில் கும்ப்ளே மீது நிரம்ப மரியாதை உள்ளது. ஆனால் உண்மையிலேயே அணிக்கு பயிற்சி கொடுத்தவர் கடைசியில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒன்றுமே செய்யாமல் வீரர்கள் கிழித்த கோட்டை தாண்டாதவர்களின் பணிக்காலம் நீடிக்கும்! தங்களைக் கசக்கிப் பிழியும் பயிற்சியாளரை வீரர்கள் விரும்புவதில்லை.
கண்டிப்பாக விராட் கோலி சேவாகைக் காட்டிலும் சாஸ்திரியை முன்னிறுத்துவதற்கே வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் சேவாக் அணிக்காக பணியாற்றுவார், நிச்சயம் வீரர்கள் தங்கள் போக்கிற்கு இருக்க சேவாக் அனுமதிக்க மாட்டார். வீரர்களிடம் காது கொடுத்துக் கேட்பார், ஆனால் ஒப்புக்குச் சப்பாணியாக அவர் ஒருபோதும் இருக்க வாய்ப்பேயில்லை.
இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் ஆடும்போது இந்திய அணி திறமைக்குக் குறைவாக ஆடியது. கோலி ஏன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் என்பது குறித்து கும்ப்ளேவுக்கே கூட ஆச்சரியமேற்பட்டிருக்கலாம். பாகிஸ்தானுக்கு இந்தியா வெற்றியைப் பரிசாக அளித்தது என்றே நான் கூறுவேன்.