கொரோனாவிற்கு பின்பாக உலகம் முழுக்க பொருளாதார ரீதியாக சீனாதான் முக்கியமான நாடாக இருக்கும், அமெரிக்கா தன்னுடைய ஸ்தானத்தை சீனாவிடம் இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
உலகமே அழிய போகிறது.. கடலில் இருந்து பெரிய சுனாமி வர போகிறது.. இப்போது இதில் இருந்து தப்பிக்க பெரிய கப்பல் கட்ட வேண்டும்.
வேகமாக கட்ட வேண்டும். அப்போது உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அணுகியது ஒரு நாட்டைதான்.. அது சீனா. சீனர்களிடம் விட்டுவிடுங்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. இந்த வசனமும் காட்சியும் இடம்பெற்று இருக்கும் படம் பிரபல ஹாலிவுட் படமான 2012.
அதாவது உலகமே அழியும் நிலையில் இருக்கும் போது வல்லரசு நாடுகள் சீனர்களின் உதவியை நாடி செல்வதாக இதில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது அந்த காட்சி ஏறத்தாழ உண்மையாகிவிட்டது.
உலகம் முழுக்க கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா தொடங்கி வளரும் நாடுகளான இந்தியா வரை எல்லா நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் சீனா ஏற்றுமதியை தொடங்கி உள்ளது.
சீனா இப்போது மட்டுமல்ல கொரோனா காலத்திற்கு முன்பாகவே உலகின் முன்னணி ஏற்றுமதி நாடாக மாறி இருந்தது.
உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் சீனாவின் பொருட்கள்தான் கோலோட்சியது. உதாரணமாக சீனாவின் வர்த்தக மதிப்பு 4.43 டிரில்லியன் டொலர். அமெரிக்காவின் வர்த்தக மதிப்பு 3.89 டிரில்லியன் டொலர்தான். உலகம் முழுக்க பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடங்கி உணவு, கட்டுமான துறை ஆகியவற்றிலும் சீனா தான் நம்பர் 1 நாடாக இருக்கிறது.
சீனா, ஜெர்மனி அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் உடன் மட்டும் வர்த்தகம் செய்யவில்லை. ஏழை நாடுகளாக கருதப்படும் ஆபிரிக்க நாடுகள் உடனும் வர்த்தகம் செய்கிறது.இலங்கையின் அசாத்திய வளர்ச்சிக்கு சீனாவின் உதவிதான் காரணம். ஆசியாவில் இருக்கும் சிறிய சிறிய நாடுகளின் வளர்ச்சியில் சீனா மிகப்பெரிய பங்கு வகித்து உள்ளது. இப்படி சீனா ஏற்கனவே பல சிறிய சிறிய நாடுகளை தங்கள் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டது.
சிறிய நாடுகளுக்கு உதவி செய்வது அவர்களின் நன்மதிப்பை பெற்றது மட்டுமின்றி இன்னொரு பக்கம் உலகம் முழுக்க எல்லா நாட்டு சந்தையையும் சீனா பிடித்துவிட்டது. இதனால் அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மதிப்பை உலக நாடுகளிடம் இழக்க தொடங்கியது.
இந்த கோபத்தில்தான் அதிபர் டிரம்ப் சென்ற வருடம் சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டார். அதில் அமெரிக்காவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதாவது அமெரிக்காவின் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதாக சீனா ஒப்புக்கொண்டது.
ஆனால் கொரோனாவிற்கு பின் அந்த வர்த்தக போர் ஒப்பந்தம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் உள்ளது. இப்போது உலகம் முழுக்க சீனா வைப்பதுதான் சட்டம் என்ற நிலை ஏறத்தாழ வந்துவிட்டது. அமெரிக்கா முழுக்க மருந்து பொருட்களுக்கு சீனாவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா அனுப்பும் மாஸ்க், வெண்டிலேட்டர் உள்ளிட்ட சாதனங்களை நம்பும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது. இதற்காக சீனா சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.
அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகின் பல முக்கியமான நாடுகளுக்கு சீனா உதவி வருகிறது. அவுஸ்ரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் , இத்தாலி, ஸ்பெயின், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அரபு நாடுகள், இந்தியா, இலண்டன் என்று பல நாடுகளுக்கு சீனா தங்கள் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது. சீனாவில் ஏற்றுமதி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ”வாவ் ” என்று சொல்லும் அளவிற்கு 300% அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் வேகமாக அதிகரிக்கும் என்கிறார்கள்.
அதேபோல் இன்னொரு பக்கம் வியட்நாம் உலகம் முழுக்க இருக்கும் சில நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மருந்துகளை வியட்நாம் ஏற்றுமதி செய்து வருகிறது. அதோடு, கியூபா மருந்து பொருட்களை இலத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. சீனாவை தவிர இந்தியா, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள்தான் அதிக ஏற்றுமதி செய்கிறது.
ஆனால் அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருக்கும் நாடுகளுக்கு தற்போது சீனாவை நம்பி இருப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் உலக நாடுகளில் பெரிய அளவில் பிரச்சனை வந்தால் அதில் அமெரிக்காதான் மூக்கை நுழைக்கும். ஆனால் இந்த முறை அமெரிக்காவிற்கே பெரிய பிரச்சனை வந்துள்ளது. இதனால் உலக நாடுகள் சீனாவை தவிர வேறு யாரையும் நம்ப முடியாத நிலைக்கு சென்றுள்ளது. இங்குதான் அமெரிக்காவை ”பிக்பாஸ்” சீட்டில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு சீனா அங்கு அமர்ந்துள்ளது.
இன்னொரு பக்கம் அமெரிக்காவும் உலக நாடுகள் உடன் மருந்து பொருட்களுக்காக சண்டை போட தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது, அடுத்த வருடம் முழுக்க இந்த சரிவு தொடரும் என்று கூறுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க உலக சுகாதார மையம் உடன் சண்டை போடுவது என்று அமெரிக்கா தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. உலக நாடுகள் இடையே இதனால் அமெரிக்கா கெட்ட பெயர் எடுக்க தொடங்கி இருக்கிறது.
அதே போல அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இலண்டன் , ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் மருந்துகளை அடித்து பிடுங்க தொடங்கி உள்ளது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் எல்லாம் அந்நாட்டின் மீது கடுமையான கோபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இவர்களுக்கு சீனா உதவி வருகிறது. இதனால் இந்த நாடுகள் அமெரிக்காவை உதறிவிட்டு சீனாவின் கரம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு பின் அதில் இருந்து மீண்டு வர அமெரிக்காவிற்கு சில மாதங்கள் எடுக்கும். அது உலக நாடுகளுக்கு ஏற்றுமதியை தொடங்க சில மாதங்கள் ஆகும். ஆனால் அதற்குள் சீனா உலக நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும் என்று கூறுகிறார்கள். இப்போதே அதற்கான செயல்பாடுகள் வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் உலகின் பிக்பாஸ் ஆக டிராகன் தேசம் சீனா மாறும் என்கிறார்கள்.

