பிரம்மாண்டமாக நடைபெறும் எழுகதமிழ் பேரணி..
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எழுச்சியுரையாற்றவுள்ளனர்.
காலம் காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இணைந்த வடகிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதையும் சமஸ்டியின் மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை காணமுடியும் என்பதையும் தமிழ் மக்கள் சார்பில் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுக தமிழ் பேரணியில் வடக்கு முதல்வர்..
கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.
சற்றுமுன்னர் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
“சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தினிக்க வேண்டாம்“ “விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்…“ “ நிறுத்து நிறுத்து பயங்கர வாத தடை சட்டத்தை திறுத்து“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்