ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தற்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரடி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்ளைக்கு மதிப்பளிக்கும் தாங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவர் ஆட்சியில் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றீர்களா? என நேரடி நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் ஜனாதிபதியிடம் வினவிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஒருவர். இதற்காக, அவருக்கு பிரதமர் பதவியை கொடுக்க முடிந்தமையையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன். இதுதான் சிறந்த நன்றிபாராட்டுதலாகும்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதையிட்டு கவலைப்படும் விடயமும் உள்ளது. அதுதான், அவருடன் இருக்கின்றவர்கள் சிலர் அவரை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவது. அவர் நம்பிய பலர் அவரை சிரமத்துக்குள் தள்ளி விடுவது. இதனை நினைத்து நான் கவலைப்படுகின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.