கடந்த ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தங்களது மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளாக கலந்து கொண்ட என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் விளக்கம் அளிக்கும் படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவரான வினோத் ராய் தனது 4-வது இடைக்கால அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில்,நாங்கள் 3-வது இடைக்கால அறிக்கையை அளித்த பிறகு லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயன்றோம். அதற்காக மே 6 மற்றும் ஜூன் 26-ம் தேதிகளில் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டினோம். ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.
ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளான என்.சீனிவாசன் (தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்), நிரஞ்சன் ஷா(சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்கம்) போன்றோர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சீர்குலைத்தார்கள். லோதா கமிட்டியின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா போன்றவர்கள் தங்களின் மாநில கிரிக்கெட் சங்க பதவியை இழக்க நேரிடும்.இதனால் அவர்கள் லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு தடையாக இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகளான என்.சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோர் ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.