முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக, பசில் ராஜபக்சவுக்கு எதிராக காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது
குறித்த வழக்கின் பிரதிவாதியான பசில் ராஜபக்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாமை காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பசில் ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதனால் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என வைத்திய அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தனர்.
எனினும், பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதைத் தவிர்த்து வருவதனால், முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

