நடந்த சம்பவங்களுக்கு தவ்ஹீதை என்ற சொல்லை குற்றம் சொல்வது பிழை. நமது நாட்டில் தவ்ஹீத் என்ற சொல் 1950களிலேயே அறிமுகமாகி விட்டது. இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும், இஸ்லாத்தில் சொல்லப்படாத மூட நம்பிக்கைகளை ஒதுக்க வேண்டும் என்பதுதான் தவ்ஹீத்வாதிகளின் கருத்தாக இருந்தது என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மெளலவி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
இது பற்றி அந்நாளில் உமர் ஹசரத் போன்றோர் நிறையவே பேசியுள்ளனர். தவ்ஹீத் கருத்துக்கள் முஸ்லிம்களிடம் மட்டுமே பேசப்பட்டன. ஆனாலும் தவ்ஹீதின் பெயரால் ஜமாஅத்துக்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
கப்றுக்கு சாஷ்டாங்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்தல் என்பதை மிகவும் பகிரங்கமாக செய்து காட்டியவர் மர்ஹூம் அல்ஹாமித் பக்ரி தர்வேஷ் ஹாஜியாகும். அவருக்கு முன்பும் தவ்ஹீதை புரிந்த முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்பதை கப்றுகள் இல்லாத பல பள்ளிகள் இருந்ததன் மூலம் அறிகிறோம். அல்பக்ரி கூட தனது அமைப்புக்கு தவ்ஹீத் ஜமாஅத் என பெயரிடவில்லை. அன்சார் சுன்னத் மஹம்மதிய்யா ( முஹம்மது நபியின் வழிமுறைக்கு உதவுவோர்) என்றே பெயர் வைத்தார். இதன் கிளைகள் கூட இப்பெயரிலேயே இயங்கின.
இவற்றின் பிரச்சாரம் 100 வீதம் முஸ்லிம்களிடமே முன்னெடுக்கப்பட்டன. இவர்கள் எந்தவித ஆயுதத்தையும் தூக்கவில்லை. கம்பு பொல்லுகளை கூட தூக்கவில்லை. ஆனால் மூட நம்பிக்கையாளர்கள் இவர்களுக்கெதிராக ஆயுதம் தூக்கினர். அவர்களைப்பிடித்து அடிப்பது, அவர்களின் தாடியை வெட்டுவது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடு பட்டனர். அவர்களை தமது பள்ளிக்கு தொழ வரக்கூடாது என்றனர். அவர்களின் மய்யத்துக்களை தமது மையவாடிகளில் அடக்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே அவர்கள் தமக்கென தனியான பள்ளிகளை கட்டும் நிலை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் தத்தம் கருத்தை முன் வைப்பது போல் உங்கள் கருத்தை இப்பள்ளியிலேயே சொல்லுங்கள் எமது கருத்தையும் இங்கேயே நாம் சொல்வோம் என்று அன்று ஏற்படுத்தியிருந்தால் பிரச்சினைகள் பெரிதாகியிருக்காது.
இதன் பின் 1970களில் கொழும்பில் தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் பெற்றது. ஆனாலும் அவர்கள் தமக்கென தனி பள்ளிவாயல் கட்டவில்லை. மௌலவி நிசார் குவ்வத்தி பிரசாரத்துடன் மட்டும் நிறுத்திக்கொண்டார்.
அதே நேரம் தவ்ஹீதை நிலை நாட்டுதல் என்பதற்கப்பால் இஸ்லாத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தே சரியாகும். இதைத்தான் குர் ஆன் நமக்கு சொல்கிறது. இஸ்லாத்திலிருந்து தவ்ஹீத் என்பது பிரிந்த ஒன்றாக நம்மவர் காட்டிக்கொண்டது பிழை என்பது எனது கருத்து. இறைவன் ஒருவன், அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பது தவ்ஹீதாக இருந்த போதும் அதனை இஸ்லாத்தின் அடிப்படையாகவே குர் ஆனும் ஹதீதும் நமக்கு கற்றுத்தருகின்றனவே தவிர தவ்ஹீத் என்ற பெயரில் தனியாக பிரியும்படி சொல்லவில்லை.
அதேவேளை சிலர் எழுதுகிறார்கள், நாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்துகள் உருவான பின்னர்தான் முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகள் உருவாகின என்று. இது வரலாறு பற்றிய அவர்களின் அறியாமையாகும்.
தவ்ஹீத் ஜமாஅத்துகள் இந்த நாட்டில் 1970களுக்கு பின்னரே உருவாகின என்பதை சொல்லியிருந்தேன். அதற்கு முன் முஸ்லிம்கள் மத்தியில் தப்லீக் ஜமாத், ஜமாஅத் இஸ்லாமி என்பனவும் அதற்கும்முன் மத்ஹபுகள், தரீக்காக்கள் என பிரிந்து முட்டி மோதிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு மதஹபுக்கும் ஒரு பள்ளிவாயல். ஒவ்வொரு தரீக்காவுக்கும் ஒரு பள்ளிவாயல். இவர்களுக்கிடையில் கல்யாணங்கள் கூட தடைப்பட்டு இருந்தன. எந்தளவுக்கு என்றால் மக்காவின் கஅபாவில் கூட ஒவ்வொரு மத்ஹபுக்கும் தனித்தனி மிஃராபுகள் இருந்தன.
தவ்ஹீத் ஜமாஅத்துகள் ஆரம்பத்தில் இஸ்லாமிய போதனைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் காலப்போக்கில் அவற்றில் இணைந்த சிலருக்கு தலைமைத்துவ ஆசை, பண ஆசை காரணமாக பல கூறுகளாக பிரிந்தன. இவ்வாறு பிரிவதை ஆரம்பத்திலிருந்தே நான் கடுமையாக கண்டித்து வந்ததால் தவ்ஹீத்வாதிகள் என்னை வெறுத்தனர். ஆனாலும் நான் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தேன்.
முஸ்லிம்கள் சிலர் மத்தியில் தீவிரவாதம் வளர்ந்தமைக்கு தவ்ஹீதோ குர் ஆன் வசனங்களோ காரணம் அல்ல. இந்தியாவில் இந்துக்களின் தீவிரவாதத்துக்கெதிராக தீவிரமாக பேசிய பழனிபாபா தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர் அல்ல. இறுதியில் அவர் இந்து மத வெறியர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அதே போல் 94களில் கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டோர் தவ்ஹீத் ஜமாஅத்துக்களை சேர்ந்தோர் அல்ல. இவர்களெல்லாம் சுன்னத்து ஜமாஅத்தை சேர்ந்தோர்தாம். இவர்கள் தீவிரவாதிகளாக காரணம் முஸ்லிம்களுக்கெதிரான மதவாதமும் இன ஒதுக்கலுமாகும்.
இஸ்லாத்தை தவ்ஹீத், தப்லீக், சுன்னத் ஜமாஅத், தரீக்கத் என்றெல்லாம் பிளவு படுத்தியமை மிகப்பெரிய தவறாகும். இந்த பிரிவுகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு அனைவரும் “நாம் முஸ்லிம்கள்” என்ற ஒரே அமைப்பாக வாழ வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கு இன்றைய தேவை ஜனநாயகரீதியில் முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தும் அரசியல் கட்சிதானே தவிர ஜமாஅத்துக்கள் அல்ல.
எனவே அனைத்து ஜமாஅத்துக்களில் இருந்தும், தவ்ஹீத், தப்லீக், சுன்னத் ஜமாஅத், தரீக்கா ஜமாஅத், ஜமாஅதுல் முஸ்லிமீன், மத்ஹபு பிரிவுகள் என அனைத்திலிருந்தும் ஒதுங்கி உண்மை “முஸ்லிம்க”ளாக வாழ்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.