அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப்பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பளம் இந்துமயானத்தை ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுத்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
அருகிலுள்ள காணிச்சொந்தக்காரரான தென்கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்தக்காணியை இன்று அளக்கமுற்பட்டபோது பிரச்சினை வெடித்தது.
ஏற்கனவே சில மாங்களுக்கு முன்பு இதேபோன்று அங்கு இதே பேராசிரியர் தனது காணியினை அளந்தபோது அட்டப்பளம் தமிழ்மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த இந்து மயானத்தையும் சேர்த்து அளக்கமுற்பட்டார்.
அப்போதும் இதே மாதிரியான பதட்டநிலை உருவானது. அப்போது இந்துமயானத்திற்கென 2ஏக்கர் காணி பூர்வீகமாக உள்ளதென பலராலும் கூறப்பட்டதனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரச்சினை தணிந்தது.
இந்த விடயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் இன்று (27) மீண்டும் அதே பேராசிரியர் மீண்டும் கிராமசேவையாளரோடு வந்து தனதுகாணியோடு மயானக்காணியையும் அளக்கமுற்பட்டபோது பிரச்சினை வெடித்தது. செய்தியறிந்து அட்டப்பளம் மக்கள் கொதித்தெழுந்து ஒன்றுகூடி போராட்டம் நடாத்தினர்.
நிந்தவூர்ப்பிரதேச செயலக அதிகாரிகள் சம்மாந்துறை பொலிசார் என பலதரப்பட்டவர்களும் அங்கு வந்துசேர்ந்தனர்.
நீதிமன்ற கட்டளையில்லாமல் மீண்டும் இந்தக்காணியை அளக்கமுற்பட்டதுதான் பிரச்சினை எனத் தெரியவருகிறது.
சம்மாந்துறைப்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் களத்திற்கு விரைந்து அசாதாரணசூழலைக்கட்டுப்பாட்டிற்கு கொணர்ந்தார்.
சம்மாந்துறைப்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னுஅசார் களத்தில்நின்று கருத்துத்தெரிவிக்கையில்:
இந்த பதட்டநிலைமையை அறிந்ததும் இங்கு வந்துசேர்ந்தேன். தனிநபர் பிரச்சினை இனப்பிரச்சினையாக மாறக்கூடிய துர்ப்பாக்கியநிலை நிலவியது. எனவே விரைந்து செயற்பட்டு முதலில் பதட்டத்தை தணித்தேன்.
இருசாராரையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். ஸ்தலத்திற்கு விரைந்த த.தே.கூட்டமைப்ப்pன் காரைதீவுப்பிரதேசபைக்குத் தெரிவான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மக்களோடு நின்று போராடினார்.